Wednesday 5 August 2009

குடும்பமே அழிந்தாலும் என் இனத்திற்காக போராடுவேன் என்று வந்த உண்மையான தலைவன் பிரபாகரன்: இயக்குநர் சீமான்

புதுச்சேரி பெரியார் திராவிடர் கழகம் சார்பில், வழக்கு நிதியளிப்பு கூட்டம் புதுச்சேரியில் நடைபெற்றது. அதில் உரையாற்றிய இயக்குநர் சீமான் இவ்வாறு கூறியுள்ளார்.
தமிழின உணர்வாளர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தை ஏவியதாக, கூட்டத்தில் தமிழக அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக தமிழகம் மற்றும் புதுச்சேரி நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகளுக்காக, பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணியிடம் ரூ. 1.50 லட்சம் நிதி வழங்கப்பட்டது.

இக் கூட்டத்தில் இயக்குநர் சீமான் பங்கேற்று பேசினார்.

’’புதுச்சேரியில் நான் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக என்னை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

நான் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசினேன். பிரபாகரன் என் அண்ணன் என்று கூறினேன். என்னை கைது செய்யும் போது புதுச்சேரியில் தேசியப் பாதுகாப்புச் சட்டம் கிடையாது. அதன் பின்னர்தான் அதைக் கொண்டு வந்தனர்.

எல்லோரும் பிறர் தங்களை தலைவர் என்று அழைக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். தந்தை பெரியார்தான் உண்மையான தலைவர்.

தமிழின விடுதலைக்காக தன் உயிரையே கொடுக்க முன்வந்த பிரபாகரன்தான் உண்மையான தளபதி. என் குடும்பமே அழிந்தாலும் என் இனத்திற்காக போராடுவேன் என்று வந்த பிரபாகரன்தான் உண்மையான தலைவன்.

சிங்கள இன வெறியர்களை எதிர்த்துப் போராடிய தலைவர் பிரபாகரன் இன்னும் உயிரோடு இருக்கிறார். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற நிலையை ஏற்படுத்தியவர் தலைவர் பிரபாகரன்’’ என்று பேசினார்.